சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி ஜெயலலிதா படத்தை சட்டசபையில் மோடி திறந்து வைப்பாரா?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் பிரதமர் மோடி திறந்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். அதில் ஒரு கோரிக்கை, தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறக்க வேண்டும் என்பதாகும்.
மேலும், இதுதொடர்பாக பிரமருக்கு இன்று மதியம், முதல்வர் கடிதமும் எழுதி, விழா நடத்த தேதி கேட்டுள்ளார்.
திமுக சார்பில் மனு
அதேநேரம் ஏற்கனவே சென்னை ஹைகோர்ட்டில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதால் அரசு அலுவலகங்களில் இருந்து அவர் போட்டோக்களை அகற்ற கோரப்பட்டுள்ளது.
போட்டோ திறக்க முடிவு
இந்த நேரத்தில், சட்டசபையில் ஜெ. போட்டோவை திறக்க எடப்பாடி அரசு முடிவு செ்துள்ளது மீண்டும் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. ஏற்கனவே சட்டசபை செயலருக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலமும் திமுகவின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு ஜெ. போட்டோவை அகற்ற கோரியுள்ளார்.
பிரதமர் வருவாரா
இப்போது பிரதமர் மூலமாக ஜெ. படத்தை திறக்க வைத்து, திமுகவின் நெருக்கடிக்கு பதிலடி தர திட்டமிட்டுள்ளது அதிமுக அரசு. சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே, சொத்து வழக்கில் ஜெ. குற்றவாளி என்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது. தீர்ப்பு வெளியாகும் முன்பு ஜெ. மரணமடைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.
குழப்பமான நிலை
இந்நிலையில், ஜெ.வுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிப்பது எப்படி என கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா போட்டோக்களை அரசு அலுவலகங்களில் வைத்திருக்க தடை ஏதும் இல்லை என்று கூறியிருந்தது. ஏற்கனவே திமுக தொடர்ந்த ஒரு வழக்கு கோர்ட்டில் பெண்டிங்கிலுள்ள நிலையில் பிரதமர் அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.