கணவன் கொலை.. 2வது மனைவியைக் காணோம்.. குழந்தைகளும் மாயம்.. கள்ளக்காதலா??
கும்மிடிப்பூண்டி அருகே சமையல் காண்டிராக்டர் இரண்டாவது மனைவியின் வீட்டிற்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சமையல் காண்டிராக்டர் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தைகளுடன் மாயமான இரண்டாவது மனைவியை தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி செயிண்ட் மேரிஸ் முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார். சமையல் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
சிவா திருவள்ளுவர் நகரில் வசித்து வந்த பிரியா என்பவரை தனது திருமணத்திற்கு முன்பு இருந்தே காதலித்து வந்ததாக தெரிகிறது. பிரியா கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
அடிக்கடி தகராறு
ரேணுகா தேவியை திருமணம் செய்த சிவா பிரியாவையும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிவாவிற்கும், பிரியாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திடீரென மாயமான சிவா
இந்த நிலையில் ரேணுகாதேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் வெளியே சென்ற சிவா, நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் ரேணுகாதேவி, பல முறை அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
பிரியா வீட்டிற்குள் துர்நாற்றம்
இதற்கிடையே நேற்று இரவு 7 மணியளவில் 2வது மனைவி பிரியா வீட்டின் வாசலில் சிவாவின் மோட்டார் சைக்கிள் நிற்பதை அறிந்த ரேணுகாதேவி, தனது உறவினர் குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த குமார், வீட்டின் அருகே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.
பிணமாக கிடந்த சிவா
ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பிரியாவையும், அவரது குழந்தைகளையும் காணவில்லை. எனவே வீட்டின் கதவை உடைத்து குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது வீட்டிற்குள் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிவா பிணமாக கிடந்தார். ரத்தம் வீட்டின் வாசல் வரை வழிந்தோடிய நிலையில் காணப்பட்டது.
கள்ளக்காதல் விவகாரமா?
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்த தடயங்களை சேகரித்தனர். மேலும் சிவா கொலையில் அவரது 2வது மனைவி பிரியாவுக்கு தொடர்பு உள்ளதா? கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர். மேலும் பிரியா எங்கே சென்றார் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.