நாம் தமிழர் கட்சி போலவே அதிமுகவிலும் "ஒருங்கிணைப்பாளர்" பதவி!
சென்னை: அதிமுகவில் புதிதாக ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியுள்ளனர். அப்பதவியில் ஓ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் இப்படி ஒரு உயர் பதவி நாம் தமிழர் கட்சியில் மட்டும்தான் உள்ளது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் சீமான் இருக்கிறார். தற்போது அதிமுகவிலும் இப்பதவி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அனிகளாக பிளவுபட்டது. இந்நிலையில், அதிமுகவில் பிரிந்து போன ஓபிஎஸ் அணி பல்வேறு கட்ட இழுபறிகளுக்குப் பின்னே இன்று ஒன்றிணைந்தது.
ஒருங்கிணைப்பாளர்கள்
அதனையடுத்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத பதவி
தமிழக அரசியலில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் என்றுதான் பதவிகள்தான் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அதை உடைத்து ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கியவர் சீமான் மட்டுமே.
அதிமுகவிலும்
இந்நிலையில் தற்போது அதிமுகவிலும் புதிதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாகியுள்ளது. அதிமுகவின் முதல் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரும் ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்துள்ளது.
புதிய சொல்லாடல்
தமிழக அரசியலில் ஒருங்கிணைப்பாளர் என்ற சொல்லாடலே மிகவும் புதிது. அதை உருவாக்கியவர் சீமான். தற்போது அதே பாணியில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாகியுள்ளது.