லட்டுக்கு இந்த அக்கப்போரா… எஸ்.ஐ உடன் கட்டிப்புரண்ட ஏட்டம்மா… சீட்டை கிழித்த எஸ்.பி.,
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவலர்கள், கைதிகளை அழைத்து சென்று ஜோதிகா படம் பார்த்த விவகாரம் அடங்குவதற்குள், லட்டுக்காக ஏட்டம்மாவும், சப்.இன்ஸ்பெக்டரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பஞ்சாயத்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பியிடம் செல்லவே அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.
சண்டை போட்ட சாகச காவலர்களின் பெயர்கள் ராஜேஸ்வரி, சின்னப்பன் என்பதாகும். விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றிவருகிறார் ராஜேஸ்வரி. காவல்நிலையத்திற்கு அருகில் புதிதாக கட்டப்படும் ஒரு கட்டடத்தின் அடிக்கல் பூஜைக்கு சென்றுள்ளார். அங்கு தலைமை காவலருக்கு அட்டைபெட்டியில் லட்டு வழங்கப்பட்டிருக்கிறது
லட்டை எடுத்துக்கொண்டு வந்து தன் மேஜை மீது வைத்துவிட்டு ராஜேஸ்வரி பணியை கவனிக்க சென்றுவிட்டார். வேலையை முடித்துவிட்டு மீண்டும் தன் இருக்கைக்கு ராஜேஸ்வரி வந்த போது, மேஜை மீது வைக்கப்பட்ட லட்டு காணாமல் போயிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சக போலீசாரிடம் விசாரித்த போது, அதே காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சின்னப்பன் என்பவர் லட்டுகளை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
தன்னை கேட்காமல் தன்னுடைய லட்டுகளை சாப்பிட்ட சின்னப்பனுடன் சென்று வசை மழை பொழிந்தார் தலைமைக்காவலர் ராஜேஸ்வரி. சக காவலர்கள் தடுத்தும் சின்னப்பனை, ராஜேஸ்வரி ஒருமையில் திட்டுவதை நிறுத்தவில்லை. ஏகவசனம் பொழிந்தார். கேட்டவர்களின் காது கூசியது. இதனால் ஆத்திரமடைந்த சின்னப்பன், ராஜேஸ்வரியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து கை கலப்பானது. இருவரும் காவல்நிலையத்திலேயே கட்டி புரண்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
இவர்களின் சண்டையை தடுக்க முடியவில்லை. இருவரையும் விலக்க முடியாத போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து எஸ்.பி இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். லட்டுக்கு இப்படி ஏன் இப்படி சண்டை போடனுமா என்று கேட்டு இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சமீபகாலமாக விழுப்புரம் மாவட்ட போலிசார் விதவிதமான தவறுகளை செய்து சஸ்பெண்டாகிக் கொண்டிருப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், இரவு ரோந்து பணிக்கு சென்ற விழுப்புரம் நகர காவலர்கள், திரு.வி.க. நகரில் இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டிருந்த மதன் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்த திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல், கைவிலங்குடன் ‘36 வயதினிலே' திரைபடத்துக்கு அழைத்து சென்றதால் ஆய்வாளர் ராஜேந்திரன் உட்பட நான்கு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவங்கள் அடங்குவதற்குள், அடுத்ததாக இரண்டு காவலர்கள் லட்டுக்காக காவல் நிலையத்திலேயே அடித்து கொண்டு தற்போது சஸ்பெண்டாகி உள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து கருத்து கூறியுள்ள விழுப்புரம் எஸ்.பி. நரேந்திரன் நாயர், வயது முதிர்ந்த உதவி ஆய்வாளர் கொஞ்சம் பொறுமையை கடைபிடித்திருந்தால் இந்த தவறே நடந்திருக்காது. ஆனாலும், தவறு செய்பவர்களை மன்னிக்க முடியாது. அதை உணர்ந்து தான் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
சக போலீசார் மத்தியில் ஏதேனும் குறைகள் இருந்தால் மேலிடத்தில் முறையிடலாம். ஆனால், தனிப்பட்ட விரோதத்தை அவர்களே தீர்க்க முயற்சிப்பதால் தான் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது.
இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க, பிரச்னைக்குறியவர்களை கண்டு பிடித்து அவர்களை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் எஸ்.பி