தனியார் பஸ் மோதி பஞ்சாலை ஊழியர் பலி - பஸ்ஸை சிறை பிடித்து அடித்து உடைத்த உறவினர்கள்
கோவை: கோவை மாவட்டத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்துடன் பேருந்தின் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே தனியார் பேருந்து மோதி பஞ்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கர்யாம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, காட்டம்பட்ட பிரிவில் உள்ள பஞ்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவர் மீது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்களும், பொதுமக்களும் தனியார் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
கோவை சத்தியமங்கலம் சாலையில் சுந்தரமூர்த்தியின் உடலுடன் மறியலில் ஈடுபட்டனர். தனியார் பேருந்து அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்று மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்த வழிதடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். மறிந்த நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.