குண்டாஸ் பாய்ந்துள்ள ‘கந்துவட்டி’ போத்ராவிற்கு எப்போது ஜாமீன்? ஆக. 11ல் விசாரணை
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ‘கந்துவட்டி’ போத்ராவின் ஜாமீன் மனு வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கந்து வட்டி புகாரில் கைதான பைனான்சியர் போத்ரா மற்றும் மகன்கள் மீதான ஜாமீன் மனு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தியாகராய நகரைச் சேர்ந்த செந்தில் கணபதி, சினிமா பைனான்சியர் போத்ரா மீது கொடுத்த புகாரை அடுத்து போத்ரா மற்றும் அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பகன்சந்த் பண்டாரி என்பவர் போத்ரா மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள இந்தப் புகாரில், தான் அடமானம் வைத்த நகைக்கு வட்டி மற்றும் அசல் பணத்தை செலுத்திய பின்னரும், போத்ரா நகையை திருப்பிக் கொடுக்கவில்லை என்று புகார் அளித்தார்.
இந்நிலையில், போத்ரா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தான் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போத்ரா சார்பில் மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வழக்கை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.