குஷ்பு தாலியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு... கும்பகோணம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!
கும்பகோணம்: ருத்ராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை இணைத்து அணிந்த விவாகரத்தில் நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை கும்பகோணம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை நாயகி குஷ்பு தனது பட விழா ஒன்றில் பங்கேற்ற போது ருத்ராட்ச வடிவில் மாலை அணிந்து அதில் தாலிபோன்ற ஒரு டாலரை அணிந்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது, அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கும்பகோணம் உமாமகேஸ்வரபுரம் சாரங்கபாணிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலா. இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான இவர் நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை அணிந்து இருந்ததாக ஒரு வார இதழில் வந்த படத்தைக் கண்டு அதிருப்தி அடைந்தார்.
இதனையடுத்து குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் 2 ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் சரவணபவனிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "ருத்ராட்ச மாலை என்பது சிவனடியார்களும், சிவபக்தர்களும் அணிவது தான் வழக்கம். ருத்ராட்ச மாலையில் ஒருமுகம் முதல் 24 முகம் வரை மாலைகள் உள்ளன. இதில் குஷ்பு அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலையில் 3 முகம் உள்ளது. 3 முகம் என்பது சிவசக்தி வழிபாடு உள்ளவர்கள் மட்டுமே அணியக்கூடியது. அதை அணிபவர்கள் ஆகம விதி, இந்து சமய மரபுகளைக் கடைபிடிக்கவேண்டும்.
ஆனால் குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலியை கோர்த்திருப்பது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது. அவர் இந்து சமயத்தின் மீதும், இந்து கடவுளின் மீதும், இந்து சமய சின்னங்களைக் களங்கப்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
எனவே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295ன் படி தண்டிக்கக்கூடிய குற்றம் செய்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று கும்பகோணம் 2 ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபவன், "மனுதாரர் பாலா நேரில் பார்த்த சாட்சிகளை இந்த மனுவில் குறிப்பிடவில்லை. வாரப் பத்திரிகையைப் பார்த்து அதில் அதிருப்தி அடைந்ததாக கூறியுள்ளார். இந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்" என்றார்.