பி.எஸ்.என்.எல் வழக்கு – தயாநிதி பி.ஏ. உள்பட 3 சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: பிஎஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன் உட்பட 3 சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்துள்ளது சிபிஐ முதன்மை நீதிமன்றம்.
தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரின் சென்னை வீட்டிலிருந்து, சன் டிவி அலுவலகத்திற்கு முறைகேடாக தொலைபேசி இணைப்பு கொடுத்த வழக்கில் தயாநிதியின் தனி செயலளர் கவுதமன், சன் டிவி தொழில்நுட்ப பிரிவு அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை கடந்த மாதம் சி.பி.ஐ கைது செய்தது.
மூவரும் சென்னையில் உள்ள சி.பி.ஐ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இம்மூவரும் ஜனவரி 22 ஆம் தேதி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சி.பி.ஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மூவரும் இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் முடிந்து ஜாமீன் மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என நேற்று முன்தினம் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று ஜாமீன் மனு மீது நீதிபதி கிருஷ்ணமூர்த்தி நேற்று வழங்கிய தீர்ப்பில், "தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரியுள்ள மூவரையும் வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவர். இதனால் மூவருக்கும் ஜாமீன் வழக்க முடியாது" என்ற அதிரடி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.