சினிமாவுக்கு கூட்டிச் செல்ல மறுத்த கணவர்... கோபத்தில் இளம்பெண் தற்கொலை
கோவை: கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்துப் போகாததால், மனமுடைந்த மனைவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(31). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அழைத்துச் செல்ல பழனிசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யபிரியா விஷமருந்தினார்.
மயக்கமடைந்த சத்யபிரியாவை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலர் தற்கொலை:
இதேபோல், கோவை ஹோப்ஸ் கல்லூரி அருகே உள்ள பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(29). தனியார் நிறுவன ஊழியர் இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
நேற்று மாலை ஜெய்சங்கர், தனது காதலியை சினிமாவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஜெய்சங்கர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.