பசுவதைச் சட்டத்துக்கு தடை எதிரொலியால் களைகட்டிய குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தை- வீடியோ
மத்திய அரசின் பசுவதை சிறப்புச் சட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்த காரணத்தால் குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தை களைகட்டியது.
கிருஷ்ணகிரி: மத்திய அரசின் கால்நடை வதை சிறப்புச் சட்டத்துக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்த காரணத்தால், குந்தராப்பள்ளி மாட்டுச் சந்தை வழக்கம் போல் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த மே மாதம் 27ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், விலங்குகள் வதைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகள் 2017-ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி, இறைச்சிகாக மாடுகளை விற்கவோ, வாங்கவோ முடியாது என்ற நிலை எற்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் உச்சநீதிமன்றமும் இந்த தடையை நீட்டித்துள்ளது.
அதனால், மாடு விற்பனையாளர்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த இடைக்கால தடை உத்தரவையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி மாட்டுச் சந்தையில், மே மாதத்துக்குப் பிறகு தற்போது மாடுகள் வரத்து அதிகரித்து, வியாபாரமும் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நடந்தது.