கையேந்தி பவனில் இட்லியும், மாட்டிறைச்சியும் சாப்பிட்டுள்ளேன்.. கருணாஸ் உருக்கம்
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கைவிடுத்த அதிமுகவின் தோழமை கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, தோழமை கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு நிருபர்களிடம் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸ் கூறியதாவது:
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக, எதிர்கட்சியினர், தோழமை கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தோம். மாடுகளை வாங்க, விற்க தடை கூடாது.
விவசாயிகளின் நண்பனாக உள்ளன காளைகள், பசுக்கள். இன்றைக்கு மாட்டிறைச்சியை உண்பவர்கள் அதிகம் உள்ளனர். உணவு கலாசாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடைாயது.
நான் சென்னைக்கு வந்த புதிதில், சாலையோர கையேந்தி பவன் கடைகளில் 2 இட்லி வாங்கி சாப்பிடுவேன். அதற்கு கிரேவியாக மாட்டிறைச்சிதான் கொடுத்தார்கள் ஏழை, எளியவர்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய இறைச்சியாக அதுதான் இருந்தது.
ரிக் வேதத்தில் இந்திரனுக்கு எருமை பலியிடப்பட்டது என்ற குறிப்பு உள்ளது. சிவன் கோயிலில் நந்தி சிலை வைக்கப்பட்டு மாடுகள் போற்றப்படுகின்றன.
மாட்டிறைச்சி பிடித்தவர்கள் அதை சாப்பிடலாம். பிடிக்காதவர்கள் சும்மா இருக்கலாம். சிலர் நானெல்லாம் பியூர் வெஜிட்டேரியன் என கூறுவார்கள். நான், பியூர் நான்-வெஜிடேரியன் என்றுதான் கூறுவேன்.
என்னை போன்றவர்களை சாப்பிட வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை கிடையாது. இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.