கோவையில் தொடங்கியது 'கௌஆதார்' - இந்திய மக்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் அடையாள எண்
மனிதர்களைத் தொடர்ந்து மாடுகளுக்கும் ஆதார் எண் எடுக்கும் பணி தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் தொடங்கியுள்ளது.
கோவை : இந்தியக் குடிமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டது போல மாடுகளுக்கும் ஆதார் எண் அளிக்கும் பணி தமிழகத்திலேயே முதன்முறையாக தொடங்கியுள்ளது. சோதனை முயற்சியாக கோவையில் கௌஆதார் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆதார் எண் வழங்குவதைப் போல மாடுகளுக்கும் தனியான அடையாள எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக இந்தத்திட்டம் கோவையில் தொடங்கியுள்ளது.
மனிதர்களுக்கு 8 இலக்க ஆதா ரஎண் அளிக்கப்பட்டது ஆனால் மாடுகளுக்கு 12 இலக்க தனி அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பால்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் நாடு முழுவதும் மாடுகளுக்கு விலங்குகள் நல அட்டை அதாவது ஹெல்த் அட்டை என்ற பெயரில் இது வழங்கப்படுகிறது.
கௌஆதார் பணி தொடக்கம்
தமிழகத்தில் கோவை, சேலம், வேலூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த முயற்சி சோதனை ஓட்டமாக கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளை மருந்தகங்கள் உள்ளிட்ட 105 மையங்கள் மூலமாக இந்த அட்டைகளை வழங்கும் பணி கடந்த சில நாட்களான நடைபெற்று வருகிறது.
3 வர்ணங்களில் அட்டை
விலங்குகளின் உடல்நலனைக் கண்காணிக்கவும், எண்ணிக்கை, பெருக்கம், நோய் பரவல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கவும் ஒவ்வொரு மாட்டிற்கும் 12 இலக்கம் கொண்ட தனி எண் வழங்கப்பட உள்ளது. கலப்பின மாடு, நாட்டு மாடு, எருமை என 3 தனித்தனியான வர்ணங்களில் இந்த அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக எத்தனை கால்நடைகள் உள்ளன என்ற விவரத்தை இதன் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மாடுக்கு புகைப்படம்
மாட்டின் உரிமையாளரிடம் மாட்டின் புகைப்படம், அடையாளங்கள், வயது, அடையாள எண், இனம், சினை ஊசி போடப்பட்ட விவரங்கள் என அனைத்தும் இடம்பெறும். இந்தவிவரங்கள் அனைத்தும் கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
சோதனை முயற்சி
மாடுகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதன் மூலம் திருட்டு, இறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்ற கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறுகின்றனர்.கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் அட்டைகள் தயார் செய்து வழங்கப்பட உள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளைக் கலைந்து மற்ற மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.