இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மனைவி ரஞ்சிதம் மறைவு! தலைவர்கள் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல் நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 82.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சிதம் அம்மாள், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது உடல் தி.நகர், சிஐடி நகரிலுள்ள நல்லகண்ணு இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அன்னாசாமி மற்றும் சந்தோசியம்மாள் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் ரஞ்சிதம். ஆசிரியராக சேவையாற்றிய அவர், படிப்படியாக முன்னேறி தலைமையாசிரியர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணல்விளை என்ற கிராமத்திலுள்ள, ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து பிறகு ஓய்வு பெற்றார்.
நல்லகண்ணுவிற்கு சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ளது. இவர் பல நேரங்களில், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வெளியே சென்றுவிடுவார். அப்போதெல்லாம், அவரது பணியில் குறிக்கிடாமல் நல்லகண்ணுவின், பொதுவாழ்க்கை வெற்றிகரமாக அமையவும், அவர் மக்களிடம் நன்மதிப்பைப் பெறவும் ரஞ்சிதம் அம்மாள் அளித்த ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது.
நல்லகண்ணு - ரஞ்சிதம் தம்பதிக்கு, காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர். காசிபாரதி ஆசிரியராகவும், ஆண்டாள் டாக்டராகவும் உள்ளனர்.
ரஞ்சிதம் மறைவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், வணிகர் சங்க பேரவை தா.வெள்ளையன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஞ்சிதம் உடல் ஸ்ரீவைகுண்டம் எடுத்துச் செல்லப்பட்டு, இன்று மாலை 4 மணிக்கு அங்கு வைத்து இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.