ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என நிபந்தனையா? தேர்தலை முன் வைத்து சொல்கிறதா தி.மு.க.?- ஜிராமகிருஷ்ணன்
சென்னை : ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்று தி.மு.க. சொல்வது தேர்தலை மனதில் வைத்து தானோ என்ற ஐயம் ஏற்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும், மது அடிமைத்தனத்தை ஒழிப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
மது விற்பனையை இலக்கு வைத்து அதிகரிக்கும் நிலைமை அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சிகளின் ஆட்சியிலுமே தொடர்ந்தது. கூடுதல் வேலை நேரம், விடுமுறை நாட்களிலும் கடை திறப்பு என்ற விதத்தில் அரசு மது விற்பனையே கண்ணாக இருந்து இருக்கிறது.
மது அடிமைத்தனத்திற்கு எதிரான பிரசாரத்திலும், போராட்டங்களிலும் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. என இரு பிரதான கட்சிகளும் விலகியே இருந்தன.
இந்த நிலைமையில் மதுவிலக்கு சட்டத்தை அமலாக்கினால் என்ன என்று தி.மு.க. தலைமை கேள்வி எழுப்பியுள்ளதுடன், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமலாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் என்ற நிபந்தனையுடன் சொல்வது - தேர்தலை மனதில் வைத்துத் தானோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
எப்படியிருப்பினும், மது அடிமைத்தனத்தை ஒழிப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும். தமிழக மாணவர்களின், இளைஞர்களின் ஏன் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை, குடும்பத்தை, உயிரை, பொருளாதாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தைச் சிதைக்கும் மது போதை அடிமைத்தனம் என்ற பெருங்கேட்டிற்கு எதிராக - மனித நேயமுள்ள அனைவரும் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.