தமிழக உரிமைகளை பறிக்கும் பாஜகவை கண்டித்து.. 6 குழுக்கள் 1000 இடங்களில் பிரச்சாரம்.. சிபிஐ அறிவிப்பு
தமிழகத்தின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் 6 குழுக்கள் 1000 இடங்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் அறிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிபிஐ சார்ப்பில் பிரச்சாரக் கூட்டம் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளதாக சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், மதச்சார்பற்ற நிலைக்கு எதிரான நடவடிக்கைகள், தமிழ்நாட்டிற்கான உரிமைகளை தட்டிப்பறிப்பது ஆகியவை கண்டிக்கத்தக்கது.
அதே போல தமிழக அரசும் தனது உரிமையை பாதுகாப்பதற்கு பதிலாக மத்திய அரசை போட்டிப் போட்டுக் கொண்டு ஆதரிக்கிறது. எனவே, இந்த இரண்டு அரசுகளையும் கண்டித்தும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
29ம் தேதி பிரச்சாரம் தொடக்கம்
இந்தப் பிரச்சார இயக்கம் தமிழ் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி 6 குழுக்கள் 6 இடங்களில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறது.
1000 இடங்களில் பிரச்சாரம்
கன்னியாகுமரி, விருதுநகர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 6 இடங்களில் இருந்து பிரச்சாரக் கூட்டம் தொடங்கப்படும். அங்கிருந்து தமிழகம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவில் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
ஜூலை 5ல் நிறைவு
இந்தப் பிரச்சாரப் பயணம் இறுதியாக ஜூலை 5ம் தேதி திருச்சியை வந்தடையும். அங்கு பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, டி. ராஜா, தா. பாண்டியன், நல்லக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
விவசாயிகளுக்கான மறியல் தர்ணா
இது தவிர ஜூலை 24, 25, 26 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் மறியல் தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும். விவசாயிகளின் பிரச்சனையில் மத்திய அரசு கவன செலுத்தவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை ரத்து செய்யவில்லை. நிவாரணம் வழங்க வில்லை. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது என்ற முத்தரசன் கூறினார்.