ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ.வை எதிர்த்து சி.பி.ஐ. போட்டி- சி.பி.எம். ஆதரவு!!
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
ஜெ. போட்டி இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால் தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தனிடையே சுயேட்சையாகப் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தம்மை பொதுவேட்பாளராக ஆதரிக்கக் கோரி ஒவ்வொரு கட்சித் தலைவராக சந்தித்து வருகிறார். அவரைப் போல மதுவிலக்கை வலியுறுத்தும் காந்தியவாதி சசிபெருமாளும் களத்தில் குதித்துள்ளார். வக்கீல்கள் சங்கத் தலைவராக இருந்த பால்கனகராஜூம் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூடி ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் கூட்டாக அளித்த பேட்டியில், சமூக கொடுமை, ஊழல், தாராளமயம், வகுப்பு வாதம் ஆகியவற்றை எதிர்த்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று முத்தரசன் கூறினார்.