பட்டாசு விபத்தில் பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் உத்தரவு
பந்தலூர் பட்டாசு விபத்தில் பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: 2013ல் கும்பகோணம் அருகே பந்தலூர் பட்டாசுக்கடை விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியில் கடந்த 20ம் தேதி பட்டாசு விபத்து நடைபெற்று 9 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கை தாமாகவே முன் வந்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பட்டாசு விபத்து தொடர்பாக திருச்சி ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். அப்போது விதிமுறைகளை மீறி திருச்சியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும், கும்பகோணம் அருகே பந்தலூரில் பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அதுவும் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.