வழக்கறிஞர்கள், விவசாயி, பொறியாளர்... கடலூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மூத்த திமுக தலைவரான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் குறிஞ்சிப்பாடியில் நிற்கிறார். இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் வன்னிய சமுதாயத்தினரை அதிக அளவில் களம் இறக்கியுள்ளது திமுக.
கடலூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். வன்னியரான இவர் பிஎல் முடித்தவர். சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட முட்டம் கிராமம் ஆகும். உயர் நிலை செயற்குழுவில் உறுப்பினராக உள்ள எம்.ஆர்.கே. கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்.
கே.ஆர்.செந்தில்குமார்
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் செந்தில்குமார், அரசியல் அறிவியல் படித்தவர். சொந்த ஊர் சிதம்பரம்தான். விவசாயத்தை தொழிலாக கொண்டவர். 42 வயதான இவரும் வன்னியர்தான். திமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.
பாவாடை கோவிந்தசாமி
விருத்தாச்சலம் தொகுதியில் முன்பு தங்க ஆனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு பாவாடை கோவிந்தசாமி வேட்பாளராகியுள்ளார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளாராக இருக்கிறார்.
சி.வெ. கணேசன்
திட்டக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் இவர் கழுதூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞர்.கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலர், மங்களூர் ஒன்றியச் செயலராக இருக்கிறார்.
சபா. ராசேந்திரன்
நெய்வேலி தொகுதியில் போட்டியிடுபவர் சபா. ராசேந்திரன். 54 வயதாகும் இவர் பொறியியல் படிப்பு படித்தவர். சொரத்தூரைச் சேர்ந்தவர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், பண்ருட்டி ஒன்றிய திமுக செயலாளராக இருக்கிறார். இவரது தந்தை சபாபதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
இள. புகழேந்தி
கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மூத்த தலைவர்களில் ஒருவரான இள புகழேந்தி. 61 வயதான இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் புதுப்பாளையம், கடலூர். வழக்கறிஞரான புகழேந்தி, மாநில மாணவரணிச் செயலாளராக இருக்கிறார்.
துரை. கி.சரவணன்
புவனகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் துரை கி.சரவணன். 50 வயதான இவர் தொழிலதிபர் ஆவார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கட்சியில் மாநில திமுக பொறியாளர் அணி செயலாளராக இருக்கிறார்.