கடலூர் சிறையில் வள்ளுவருக்குக் கிடைத்த கெளரவம். கைதி வடிவமைத்த அழகிய சிலை!
கடலூர்: கடலூர் மத்திய சிறையிலிருக்கும் ஆயுள் தண்டணைக் கைதி வடிவமைத்த திருவள்ளுவர் சிலை அனைவரையும் கவர்ந்து வருகிறது.
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று, கைதியாக இருப்பவர் கலைக்கண்ணன் (31). சிலை வடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் கொண்டிருந்த இவர், 5 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்துள்ளார்.
கலைக்கண்ணன் உருவாக்கிய இந்தத் திருவள்ளுவர் சிலையில், தன்னுடைய ஒரு கையில் ஓலைச் சுவடியுடனும், இன்னொரு கையில் எழுத்தாணியுடனும் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் காட்சி தருகிறார்.
சிமெண்ட் கலவையைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலை கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. கலைக்கண்ணன் வடிவமைத்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
இதுகுறித்து, கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறுகையில்,ஆயுள் தண்டனை கைதியான கலைக்கண்ணன் 2007-ம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். கலைக்கண்ணன் - ரேவதி தம்பதிக்கு இலக்கியா, குணா, சவுமியா என்ற குழந்தைகள் உள்ளனர்.
கோபுரக் கலை, சிற்பத் தொழில் தெரிந்த இவர் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், டெல்லியிலும் சிற்ப வேலைகள் செய்துள்ளார்.
கலைக்கண்ணனிடம் உள்ள சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலை ஆகியவற்றை அறிந்து அவரது திறமைகளை வெளிக்கொண்டுவரவும், அவர் சிறை வளாகத்தில் இருந்தபடியே தன்னுடைய திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்தோம். தற்போது அவர் மிகுந்த மனத் தெளிவுடனும், உற்சாகத்துடனும் சிற்பக் கலைப் பணியை சிறையிலேயே செய்து வருகிறார் என்றார்.
விடுதலை செய்ய வேண்டும்
இதற்கிடையே, கலைக்கண்ணனுக்கு தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் ராஜ்குமார் பழனிச்சாமி கூறுகையில்,
வாழ்நாள் சிறைக்கைதி வடிவமைத்த அழகிய திருவள்ளுவர் சிலை. அவருக்கு நம் பாராட்டுகள் !! கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் கலைக்கண்ணன் அவர்களின் சிற்பக்கலையின் மீதான ஆர்வம் எள்ளளவும் குறையவில்லை. மேலும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று நினைத்த அவரின் உணர்வு பாராட்டத்தக்கது.
திருவள்ளுவரின் மீது உண்மையான பற்று இருந்தால் மட்டுமே இதுபோன்ற நேர்த்தியான சிலையை வடிவமைக்க முடியும். கலைக்கண்ணன் என்ன குற்றம் செய்து சிறைக்கு வந்துள்ளார் என்று தெரியாது. இருப்பினும் அவர் அறத்தை போதித்த வள்ளுவருக்கு சிலை எழுப்பியுள்ளார். நிச்சயம் அவர் தான் செய்த குற்றத்தை உணர்ந்திருப்பார் என்றே நம்புகிறோம்.
அந்த வகையில் நன்னடத்தையின் அடிப்படையில் கலைக்கண்ணன் அவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்து அவரை விடுதலை செய்யலாம். விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல் அவருக்கு தமிழக அரசு விருது வழங்கியும் சிற்பக் கல்லூரியில் வேலை வழங்கியும் மரியாதை செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் உலகிற்கு இது போன்ற பல படைப்புக்களை கலைக்கண்ணன் மேன்மேலும் வழங்க வேண்டும் . தமிழ் கூறும் நல்லுலகம் இவரை பாராட்ட முன்வர வேண்டும்என்றார் அவர்.