குற்றவாளிகள் தேர்தலில் நிற்கலாமாம்.. தவறே இல்லையாம்... பதற்றத்தில் உளறி கொட்டிய 'செங்ஸ்'
நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று சட்டசபையில் அவை முன்னவர் செங்கோட்டை பதற்றத்தில் உளறினார். இதனை ஸ்டாலின் கடுமையான கண்டித்தார்.
சென்னை: தமிழக சட்டசபையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது,
காலை 10.30 மணிக்கு பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடினார். அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு எதிர்க்கட்சியான திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
வாழ்த்துவது வழக்கம்
அவை முன்னவர் செங்கோட்டையன் பேசும்போது, இது சட்டமன்ற மரபுகளில் இடம் பெற்றிருக்கின்ற ஒன்று. இதுபோன்ற மரபுகளை எங்களால் எடுத்துக்காட்ட முடியும். தங்களுடைய கழகத்தின் தலைவர்களை, பொதுச் செயலாளர்களை எந்த நிலையில் இருந்தாலும் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டமன்றத்தில் பேசுகிறபோது அவர்களை வாழ்த்திப் பேசுவது வழக்கம். இது நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.
தவறில்லைதான்..
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அவர்களுடைய கட்சித் தலைவர்கள் பற்றி, அவர்களுக்கு பிடித்த தலைவர்களைப் பற்றி பேசுவதை நான் தவறு என்று சொல்லவில்லை.
குற்றவாளிகள் பற்றி…
நீதிமன்றத்தில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு நீங்கள் அனுமதி தருவது இல்லை. ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை பற்றி பேசி இங்கு பதிவு செய்வது எப்படி முறையாகும். இதுதான் என்னுடைய கேள்வி என்றார்.
உளறிய அவை முன்னவர்…
அதற்கு மீண்டும் பதில் அளித்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று சொல்லிவிட்டார்.
ஸ்டாலின் மறுப்பு
இதற்கு மீண்டும் பதில் அளித்த ஸ்டாலின், மாண்புமிகு அமைச்சர் தவறான தகவலை தரக்கூடாது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் எப்படி நிற்க முடியும். 4 வருடம் தண்டனை பெற்றவர்கள் 10 வருடம் தேர்தலில் நிற்க முடியாது என்பதுதான் சட்டம் என்றார். இதற்கு செங்கோட்டையன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.