இன்று பிற்பகல் ஆந்திராவில் கரையை கடக்கும் லெஹர் புயல்
சென்னை: லெஹர் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானை தாக்கிய லெஹர் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புயல் மீண்டும் வலுவடைந்து மிகவும் தீவிரமாகியுள்ளது. லெஹர் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 570 கிமீ தொலைவில் மற்றும் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 510 கிமீ தொலைவிலும் உள்ளது.
மேற்கு வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கும் லெஹர் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. அந்த நேரம் ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யும். மேலும் சில இடங்களில் கன மழையும், தெலுங்கானாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும்.
புயல் கரையை கடக்கையில் காற்று மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும். லெஹர் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் இன்று தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.