அதிமுக பிளவுக்கு பாஜக காரணமில்லாமல் வேறு யார்.. டி. ராஜா அதிரடி
அதிமுகவின் பிளவுக்கு பாஜவே காரணம் என்று சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கும்பகோணம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை பாஜக நினைத்தபடி பிளவுபடுத்தி வருகிறது என்று சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று கும்பகோணத்திற்கு வந்த டி. ராஜா செய்தியாளர்களிடம், அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசின் அழுத்தமும் ஆதிக்கமும் தான் காரணம் என்று கூறினார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை தன் வசப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசை எதிர்க்கும் திறனை தமிழக அரசு இழந்து நிற்கிறது என்று டி. ராஜா கூறினார். பாஜகவிற்கு அஞ்சாமல் முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தேசிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் டி. ராஜா தெரிவித்தார்.