சன் டிவி ஊழியர்களை அடித்து, துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது சிபிஐ: மாறன் குற்றச்சாட்டு
சென்னை: கைதான தனி உதவியாளரையும், சன்டிவி ஊழியர்களையும், அடித்து உதைத்து எனக்கு எதிராக சிபிஐ வாக்குமூலம் பெற்றுள்ளது என்று தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ள நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்து பேசினார்.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 300க்கும் அதிகமான உயர் வேக தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதிமாறனின் சன்டிவி நிறுவனத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலராக இருந்த வி.கவுதமன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் கேஎஸ்.ரவி ஆகியோரை நேற்றிரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தயாநிதி மாறன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கில் இப்போது கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அரசியல் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள தயாநிதிமாறன், கைது செய்துள்ள சன்டிவி ஊழியர்களையும், தனது உதவியாளர்களையும் சி.பி.ஐ போலீசார் அடித்து துன்புறுத்தி, தனக்கு எதிராக வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.