தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: 'ஆடிட்டர்' குருமூர்த்தி, ப.சி. மீது தயாநிதி மறைமுக தாக்கு!
சென்னை: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்குக்கு காரணமே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று அவர்களது பெயர்களை நேரில் குறிப்பிடாமல் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கொந்தளித்தளித்துள்ளார்.
தயாநிதி மாறன் தமக்கு ஒதுக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தினார் என்பது சி.பி.ஐ. வழக்கு.
இந்த வழக்கில் சன் டி.வி. நிர்வாகிகள் கண்ணன், ரவி மற்றும் தயாநிதியின் உதவியாளர் கவுதமன் ஆகியோர் அண்மையில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு தயாநிதி மாறன் அளித்த பேட்டியின் சாரம்சம்:
காங்கிரஸ் காலத்திலேயே இந்த வழக்கு போடப்பட்டது. அதற்கு அப்போது இருந்த ஓர் அறிவு ஜீவிதான் காரணம். அவர் தன்னையும், தன் மகனையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி தி.மு.கவைக் கட்டுக்குள் வைக்க நினைத்து, திட்டமிட்டு எங்களைக் களங்கப்படுத்தினார். 'நீங்கள் ப.சிதம்பரத்தைச் சொல்கிறீர்களா?' என்று ஜூவி நிருபர் கேட்க,''நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.
காங்கிரஸ் காலத்தில் அந்த அறிவுஜீவி என்னை அழிக்க நினைத்தார். அதற்குப் பிறகு வந்திருக்கும் இந்த அரசிலும் அவரைப்போன்ற ஓர் அறிவு ஜீவி எங்களை அழிப்பதையே கொள்கையாக நினைத்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞரிடம் இந்த வழக்கு குறித்து கருத்துக் கேட்டபோது, அவர் 'இது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உகந்தது இல்லை' என்று பரிந்துரை செய்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு அவரை வற்புறுத்தி 'இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது' என்று மாற்றி அறிக்கை அளிக்க வைத்துள்ளனர்.
தி.மு.கவிடம் காங்கிரஸ் கூட்டணி பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ரெய்டு நடத்தினர். இது எல்லாம் எங்களை மிரட்டி தொகுதிகள் வாங்க அன்று காங்கிரஸ் நடத்திய நாடகம்.
தி.மு.கவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணித்தான் ஆ.ராசா, கனிமொழி மீது எல்லாம் வழக்குப் போட்டனர். இந்த ஆட்சியிலும் இது தொடர்கிறது.
இவர்களின் எல்லா செயல்களிலும் ஓர் அரசியல் உள்நோக்கம் உள்ளது. குருமூர்த்தி மகள் திருமணத்துக்கு பி.ஜே.பி தலைவர்கள் வந்தது, ஜெட்லி- ஜெயலலிதா சந்திப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
நாங்கள் ஒருபோதும் பி.ஜே.பியை எதிர்த்துவிடக் கூடாது என்றுதான் எங்களை திட்டமிட்டுப் பொறியில் சிக்க வைத்திருக்கிறார்கள். தி.மு.கவை அழிக்க, தயாநிதி மாறனை துன்புறுத்த இவர்கள் பயன்படுத்தியுள்ள அஸ்திரம்தான் சி.பி.ஐ. இது சம்பந்தமான விளக்கத்தைத் தலைவருக்கும் தளபதிக்கும் அளித்துவிட்டேன். தலைவர் ஒப்புதலுடன் நான் பேட்டி அளித்தேன். அரசியல் ரீதியான இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் என்று தயாநிதி கூறியுள்ளார்.
மேலும் யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை சந்தோஷப்படுத்தும் செயல்போலவே சிபிஐயின் செயல்பாடுகள் தெரிகிறது. அந்தப் பிரமுகர் சில வாரங்களுக்கு முன்புதான் தன் மகளுக்கு சென்னையில் திருமணம் நடத்தினார். அதற்கு தற்போது யார் யார் எல்லாம் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் அழைத்திருந்தார். அந்தத் திருமணத்துக்கான பரிசுதான் இந்தக் கைது என்றும் தயாநிதி கூறியுள்ளார்.
''நீங்கள் ஆடிட்டர் குருமூர்த்தியைச் சொல்கிறீர்களா?' என்ற விகடனின் கேள்விக்கு, 'அவர் இந்த விவகாரத்தில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பதுதான் அனைவருக்கும் தெரியுமே. திட்டமிட்டு அவர்தான் இதனை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். நான் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை அப்போதும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். இவர்கள் எந்த இணைப்பு எண்ணை தங்களது புகாரில் அளித்து உள்ளார்களோ, அதே எண்ணைத்தான் நான் இன்றும் பயன்படுத்தி வருகிறேன். அப்படி என்றால், நான் இன்னமும் முறைகேடாக அந்த இணைப்பைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்வார்களா? 323 இணைப்புகள் இருந்தன என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்? எட்டு வருடங்களாக என்னைத் துன்புறுத்தும் விதமாக நடந்துவரும் இந்தப் பிரச்னையில், ஒன்றுமே இல்லாமல் இப்போது இந்தக் கைது நடந்திருப்பது சந்தேகத்தைத்தான் வரவழைக்கிறது. சி.பி.ஐ அலுவலகத்தில் அவர்கள் மூவரையும் எனக்கு எதிரான வாக்குமூலம் அளிக்கச் சொல்லி மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். மிகப்பெரிய அறிவு ஜீவி என்று சொல்லிக்கொள்ளும் குருமூர்த்தி, எனக்கு அளிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தினேன் என்று எப்படிக் கண்டுபிடித்தார்? அப்படியே இருந்தாலும், சி.பி.ஐ தன் அறிக்கையில் ஒரு கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அப்படி என்றால், ரூ.300 கோடி இழப்பு என்று முன்பு குருமூர்த்தி தவறான தகவல் கொடுத்தாரா? அவர் சொல்வதைத்தான் சி.பி.ஐ கேட்குமா? பிரதமர் மோடியைவிட தன்னை பலம் வாய்ந்த சக்தியாக அவர் நினைத்துக் கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள புகார் உண்மை என்றால், வழக்குப்பதிவு செய்து என்னைக் கைது செய்யலாமே! அதனை விட்டுவிட்டு என் வீட்டுப் பணியாளர்களைக் கைதுசெய்து மிரட்டுவது கோழைத்தனம். இருமுறை அமைச்சராக இருந்த எனக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பாமர மக்கள் எப்படி சி.பி.ஐயை நம்புவார்கள்?.
இவ்வாறு தயாநிதி கூறியுள்ளார்.