நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் பிரான்ஸிலிருந்தே வெளியாகியிருக்க வாய்ப்பு: பொன். ராதாகிருஷ்ணன்
செங்கோட்டை: நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்துதான் வெளியாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு நாம் பொறுப்பாக முடியாது என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இந்தியா முழுவதும் மிக முக்கியமான 150 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு துரதிர்ஷ்டவசமாக நடைபெறாமல் போனது. இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும். இதுகுறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தியை நாளை சந்திக்க இருக்கிறேன். வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
நீர்முழ்கி கப்பல் தொடர்பான ரகசிய தகவல்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்தே வெளியாகியிருக்க வாயப்புள்ளது. இதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இந்தியாவில் தகவல் வெளியானால் மட்டுமே நாம் பொறுப்பேற்க முடியும்.
மதுரை முதல் தென்காசி வரையிலான நான்குவழிச் சாலைப் பணியில், மதுரை முதல் திருமங்கலம் வரையிலான பணி முடிவடைந்தது. தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை பணி தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று தென்காசி முதல் பணகுடிவரையிலும் நான்குவழிச் சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.