குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய்: சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு வயிற்றுப்போக்கு
சென்னை: நாய் இறந்துகிடந்த தண்ணீரில் சமைத்த உணவை சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயிற்றுப்போக்குனால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான விடுதி சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக பலவிதமான நோய்களுக்கு ஆளாகினர். ஆனால் அவர்கள் இதற்கான காரணம் புரியாமல் தவித்தனர். இதன் காரணமாக மாணவர்கள் விடுதியில் சாப்பிடவே அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஏராளமான மாணவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டனர். இதனால் விடுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அவர்கள் ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து 45 மாணவர்கள் விடுதிக்கு திரும்பினர். கடுமையாக பாதிக்கப்பட்ட 55 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதியில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டாகும்.
இதனிடையே நேற்று மதியம் அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருந்தனர். அப்போது துர்நாற்றம் வீசவே அங்குள்ள தரையில் உள்ள தண்ணீர் தொட்டியை பார்த்தனர். அப்போது அங்கு நாய் ஒன்று செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதியில் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தண்ணீர் தொட்டியை மூடிவைப்பதும் கிடையாது, சுத்தம் செய்தும் பல ஆண்டுகள் இருக்கும். இதனை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இனியாவது முறையாக தொட்டியை சுத்தம் செய்து தங்களின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும் என்பது மாணவர்களின் வலியுறுத்தலாகும்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதியை சரியாக பராமரிப்பதே கிடையாது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் முழுவதும் விடுதியில் தேங்குகிறது. இதன் காரணமாக கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே இரவு படிக்க முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம் என்பதும் மாணவர்களின் குற்றச்சாட்டாகும்.
இங்கு வழங்கப்படும் உணவும் தரமானதாக இல்லை. இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தும் அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாய் இறந்தது கூட தெரியாமல் அதே தண்ணீரை சமைத்து, குடிக்க பயன்படுத்தியதாலேயே நூற்றுக்கணக்கான மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.