பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர்காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவர் இடையர்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ளார். நேற்று மாலை பஞ்சாயத்து அலுவலக சுவர் மற்றும் பஸ் நிறுத்த சுவர்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி பெயரை குறிப்பிட்டு இது எங்களது கோட்டை என எழுதப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தனர். இது குறித்து பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர் அந்த சுவர் விளம்பரங்களை பார்த்தார்.
பாலகிருஷ்ணன் உடனடியாக சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை அழித்து சுத்தப்படுத்தினார். அவர் சுவர் விளம்பரத்தை அழிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அதே ஊர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்னராஜன் என்பவரின் மகன்கள் வினோத், ஆறுமுகம் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணனை அவதூறாக பேசி வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ஏரல் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வினோத், அவரது தம்பி ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்தார்.