வங்கக் கடலில் உருவானது கியான்ட் புயல் - தமிழகத்திற்கு பாதிப்பில்லை
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது அதற்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என பெயரிடப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கியான்ட் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கியான்ட் புயல்
மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு 'கியான்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது போர்ட் பிளேருக்கு வடக்கே - வட மேற்கே 620 கி.மீ., கோபால்பூருக்கு தென் கிழக்கே 710 கி.மீ, விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும், இதனால் மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் பூரி - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இருப்பினும், இந்தப் புயல் கரையை கடக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இந்தப் புயலால் ஒடிசா, வடக்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
கியான்ட் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 850 கி.மீ வேகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.