ஆர்கே.நகரை உங்கள் நிரந்தர தொகுதியாக மாற்ற வேண்டும்.. தீபாவுக்கு அதிமுக மகளிரணி கோரிக்கை
ஆர்கே.நகரை உங்கள் நிரந்தர தொகுதியாக மாற்ற வேண்டும் என ஜெ.தீபாவுக்கு அதிமக மகளிரணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் உள்ள அதிமுக பெண் தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆர்கே.நகர் தொகுதியில் ஜெ. தீபா போட்டியிட்டு அதனை அவரின் நிரந்தர தொகுதியாக மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, புதிதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகர் சிவஞானம் சாலையில் உள்ள அவருடைய வீட்டிற்கு நாள்தோறும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் வந்து வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தீபாவைச் சந்தித்தனர்.இதைத்தொடர்ந்து மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் இதழியல் துறை மாணவர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஜெ.தீபாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முழு ஆதரவு அளிப்போம்
இதனிடையே சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் பலர் ஜெ.தீபாவின் கணவர் மாதவனை சந்தித்து பேசினர். அப்போது ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டியிட்டால் முழுமையாக ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.
நிரந்தர தொகுதியாக மாற்ற வேண்டும்
அந்த தொகுதியை நிரந்தரமாக தீபாவின் தொகுதியாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு ஆர்.கே.நகர் மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இளைய தலைமுறைக்கு வரவேற்பு
தொடர்ந்து மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சரோஜா வைத்தியநாதன், சினிமா துறையைச் சேர்ந்த எஸ்.சுகாசினி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இளைய சமுதாயத்தினர் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிர்வாகிகளை நியமிப்பதில் தீவிரம்
பேரவைக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீபா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பேரவையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ள இருக்கிறார்.
விரைவில் அறிவிப்பு
இதற்கான பயணத் திட்டம் வகுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.