ஓபிஎஸ் அணியோடு 'டூ' விட்டது ஏன் தெரியுமா? தீபா சொல்லும் அடடே காரணங்கள்!
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஏன் ஓபிஎஸ் அணியினரோடு சேரவில்லை என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியினரும் சசிகலாவுடன் இருந்தவர்கள் தான் அதனால் அவர்களுடன் சேர தனக்கு விருப்பமில்லை என தீபா தெரிவித்துள்ளார். மேலும் தன்னை எதிர்த்து ஆர்கே.நகரில் போட்டியிடுபவர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர்கள் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டுவருகிறார். அவருக்கு பொதுமக்கள் உட்பட அதிமுகவினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுகவை மீட்க ஓபிஎஸ் உடன் இணைந்து இரு கரங்களாக செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸ் தரப்பை அதிர வைத்த தீபா
இதைத்தொடர்ந்து பேரவையை தொடங்கிய அவர், தன்னிச்சையாக ஆர்.கே.நகரில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். இது ஓபிஎஸ் தரப்பினரை அதிருப்தியடைய செய்தது.
பலர் விமர்சிக்கிறார்கள்
இந்நிலையில் ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தீபா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஓபிஎஸ் அணியினருடன் சேராதது குறித்து தன்னை பலர் விமர்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
அவர்களுடன் சேர தனக்கு விருப்பமில்லை
மேலும் தான் எதற்காக ஓபிஎஸ் அணியில் சேர வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள தீபா, அவர்களும் நீண்ட நாட்கள் சசிகலாவுன் இருந்தவர்கள் தானே என்று தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே அவர்களுடன் சேர தனக்கு விருப்பமில்லை என்றும் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வடிவத்தில் பார்க்கின்றனர்
மறைந்த தனது அத்தை ஜெயலலிதா வடிவத்தில் மக்கள் தன்னைப் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது என்றும் தீபா தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள்
தன்னை எதிர்த்து நிற்கும் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி இருப்பவர்கள் என்று கூறியுள்ள தீபா அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தன்னால் எளிதில் வெற்றி பெற முடியும் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.