இன்று நாள் நல்லாயில்லையா? இரட்டை இலை சின்னம் வீடு தேடி வரும் என்ற மெத்தனமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தீபா, வேட்புமனு தாக்கல் செய்வதை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த தீபா, அதை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க விரும்பாத சிலர் தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். அப்போது தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுமக்கள், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட தீபா, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். இதனிடையே, சசிகலா அணியில் இருந்து பிரிந்து வந்த ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார். மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிக்கு எதிராக தீர்ப்பு வந்தவுடன் ஜெ.சமாதியில் ஓபிஎஸ்ஸை எதிர்பாராதவிதமாக சந்தித்த தீபா, ஓபிஎஸ்ஸும், தானும் இருகரங்களாக செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
புதிய அமைப்பு
இதனிடையே, என்ன காரணத்தினாலோ தீபா, ஓபிஎஸ் அணியில் இணையாமல் புதிய பேரவையை தொடங்கினார். அதற்கு எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்று வைத்தார். இந்நிலையில் நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி, செயல்பாடுகளில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் தீபா ஆதரவாளர்கள் குழம்பினர்.
ஆர்.கே.நகரில் போட்டி
ஜெயலலிதா இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் அவரது மறைவை ஒட்டி, வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் தானே போட்டியிடுவதாக தீபா அறிவித்தார்.
மாதவன் புதிய கட்சி
இதனிடையே ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த தீபா கணவர் மாதவன் தீபா பேரவையில் தீயசக்திகள் புகுந்து விட்டதாக குற்றம்சாட்டினார். பின்னர் தான் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தீபா பேரவை சில இடங்களில் கலைப்பு
புதிய கட்சி என்று அறிவித்த ஓரிரு நாளில் திருவேற்காட்டில உள்ள சிவன் கோயிலுக்கு வந்த மாதவன், தீபாவை முதல்வராக்குவதே எனது கடமை என்றும் தீபா பேரவைக்கு வலுசேர்க்க கட்சி தொடங்குவதாகவும் தெரிவித்தார். இதனால் மொத்தமாக குழப்பம் அடைந்த தீபா பேரவை நிர்வாகிகள் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
இன்று வேட்புமனு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளை ஆகும். இந்நிலையில் தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தார். இதற்காக அத்தையின் சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி வாங்கி தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு செல்ல இருந்தார்.
நாளை ஒத்திவைப்பு
ஆனால் திடீரென்று நாளை வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்வதாக அறிவித்துவிட்டார். எல்லாவற்றிலும் குழப்பும் தீபா, கடைசியில் வேட்புமனு தாக்கலிலும் குழப்பிவிட்டாரே என்று நிர்வாகிகள் கருதுகின்றனர். இன்று நல்ல நாள் இல்லை என்பதால் நாளை தீபா வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறினாலும் அதில் வேறு காரணங்கள் இருப்பதாகவே அரசியல் நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்ன காரணம்?
இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்காக அல்லது ஓபிஎஸ் அணிக்கா என்ற பஞ்சாயத்து இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் முன்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தெரிந்து கொண்டு நாளை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தீபா நினைத்திருக்கலாம். இல்லையெனில் நிர்வாகிகள் கூண்டோடு ஓபிஎஸ் அணியில் இணைவதை போல் தாமும் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுவதற்கு தீபா காத்திருக்கலாம் என்றும் தெரிகிறது.