தீபாவுக்கும் மாதவனுக்கும் கடும் சண்டை... அடிதடியில் இறங்கிய ஆதரவாளர்கள்
தீபாவிற்கும் மாதவனுக்கும் இடையேயான முட்டல் மோதல் இன்று ஊராறிந்த விசயமாகிவிட்டது. ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சென்னை: வீட்டிற்கு வந்த மாதவனை தீபாவும் அவரது கார் டிரைவரும் அலட்சியப்படுத்தியதால் ஆதரவாளர்களுக்கு இடையே அடிதடி மூண்டது. ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் தி. நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த 4 மாதங்களாக ஊடக வெளிச்சத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சிலரால் அறியப்பட்டுள்ளார். சசிகலாவை பிடிக்காத அதிமுக தொண்டர்கள் தீபாவை தேடி வந்தனர்.
தொண்டர்கள் கூட்டம் வருவதை நம்பி பேரவையை தொடங்கினார். ஆனால் அவரது கணவர் மாதவனாலேயே அந்த பேரவை உடைந்து போனது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். தனி கட்சி தொடங்கப் போவதாக கூறினார் மாதவன்.
பிரிந்து போன மாதவன்
மாதவன் பிரிந்து சென்றதும், ஏவி.ராஜா தான் தீபாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். அதன்படி, தீபா எங்கு சென்றாலும் அவருடன் ஏ.வி.ராஜா செல்வார். சொந்த கணவரை ஓரம்கட்டிவிட்டு இப்படி கார் டிரைவருடன் தீபா வலம் வருகிறாரே என்று பலரும் பேச அதை அவர் கண்டு கொள்ளவில்லை.
மாறி மாறி சண்டை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம், செய்தியாளர்கள் சந்திப்பு, மாதவனின் காமெடி பேட்டிகள் தீபா மீதான பிம்பத்தை உடைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.
தீபா தனது கணவரின் பெயரையே வேட்புமனுவில் குறிப்பிட மறந்தார். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத மாதவன் தீபா அம்மாவை முதல்வராக்கியே தீருவேன் என்று வலம் வந்தார். இதை அறிந்து அதிர்ந்து போனதாலேயோ என்னவோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தீபாவின் பாராமுகம்
சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் வைத்து ஆர்கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய கணவர் மாதவன், தீபாவின் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததும் அவரை வெளியே போகச் சொல்லி சிலரிடம் தீபா சொல்லி அனுப்பினார். அதனால் மாதவன் செய்தியாளர்கள் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்.
கதவை பூட்டிய தீபா
செய்தியாளர் கூட்டம் முடிந்ததும், தீபா தன் கணவர் உள்ளே நுழைந்துவிடாதவாறு வீட்டின் அனைத்துக் கதவுகளையும் செய்தியாளர்களின் முன்னிலையிலேயே பூட்டினார். இதைப் பார்த்த மாதவன் சிறிதுநேரம் காத்திருந்து விட்டு, காரில் ஏறி போனார்.
முட்டி மோதும் மாதவன்
இந்த நிலையில், இன்று மாதவன் தீபாவை பார்ப்பதற்காக மீண்டும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள இல்லத்துக்கு சென்றார். ஆனால், கேட்டில் இருந்த செக்யூரிட்டிகள் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாதவன், காரை விட்டு இறங்கி சத்தம் போட்டார். இருப்பினும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
கடும் வாக்குவாதம்
இதையடுத்து மாதவனுடன் வந்த பெண்கள் உள்பட அவரது ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் செக்யூரிட்டிகள் மற்றும் தீபா தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் உள்ளே தீபா மற்றும் ஏ.வி.ராஜா, எதுவும் தெரியாதது போல் இருந்தனர். கடும் வாக்குவாதத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது.
மாறி மாறி சண்டை
தீபாவின் நண்பர்கள், தம்பதியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சமாதானத்தை தீபா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்குள், வீட்டிற்கு வெளியில் இருந்த இருதரப்பினரின் ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் அடிதடி ஏற்பட்டது. தண்ணீர் பாட்டில்கள், கற்கள் என கையில் கிடைத்ததை கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசினர்.
கண்ணீர் விட்ட பெண்கள்
தீபா ஆதரவாளர்களும், மாதவன் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள சில பெண்கள் கண்ணீருடன் பேசினர். டிரைவர் ஏவி.ராஜாவை பார்த்து, எல்லா பிரச்னைக்கும் நீ தான் காரணம், தீபாவை கைக்குள்ளேயே போட்டுக்கொண்டு இந்த ஆட்டம் போடுகிறாய் என ஆவேசமாக பேசினர்.
ஒழிக கோஷம்
ஓருவரை ஒருவர் வசைபாட மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்படவே அங்கிருந்த போலீசார் அனைவரையும் உடனடியாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தீபா-மாதவன் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் மாதவன் ஆதரவாளர்கள் வீட்டின் அருகில் கூடி நின்றி, தீபா ஒழிக, தீபா ஒழிக என கோஷமிட்டனர்.
ஒரு வீடு இரு அணி
தீபா பேரவை நிர்வாகிகளும், மாதவன் ஆதரவாளர்களும் ஒரே இடத்தில் கூடுவதாலேயே இந்த பிரச்சினை எழுகிறது. ஆனால் ஒரே வீட்டில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள் சண்டை போட்டு பிரிந்து போனாலும் உறவினர்கள் சமாதானம் செய்து வைக்கின்றனர். ஆனால் தொண்டர்கள் கைகலப்பில் ஈடுபடுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேட்கின்றனர் தி.நகர் வாசிகள். இது எங்கே போய் முடியுமோ?