தீபா ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்.. சசிகலாவுக்கு எதிராக கோஷம்.. மெரினாவில் போக்குவரத்து பாதிப்பு
மெரினா பீச் பகுதியில் நெரிசலால் தீபா கஷ்டப்பட்டதை பார்த்த அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கோபமடைந்தனர். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து சாலை மறியலில் குவித்தனர்.
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்டு அவரின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் மெரினா பீச் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது ஆயிரக்கணக்கான தீபா ஆதரவாளர்களான ஆண்களும், பெண்களும் அங்கு குவிந்தனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்டத்திலிருந்து வெளியேறி தனது காரில் ஏறுவதற்கு, தீபா மிகவும் சிரமப்பட்டார். ஆனால் அவரை சுற்றி பாதுகாப்புக்காக பெண் போலீசார் உட்பட யாருமே நியமிக்கப்படவில்லை. நெரிசலால் தீபா கஷ்டப்பட்டதை பார்த்த அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கோபமடைந்தனர்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து சாலை மறியலில் குவித்தனர். இதனால் போக்குவரத்து மிகுதியாக இருக்கும், விவேகானந்தர் இல்லம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சசிகலாவுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு கயிறுகள் மூலம் போராட்டக்காரர்கள் ஒருபக்கமாக கொண்டு சென்று நிறுத்தப்பட்டனர். இதனால் அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு வாகனங்கள் சாலையில் செல்ல முடிந்தன.