சசிகலா கொடும்பாவியை எரித்த தீபா ஆதரவாளர்கள்.. விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாச்சலத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரிக்கப்பட்டது.
விருத்தாச்சலம்: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க அக்கட்சி தொண்டர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சசிகலா கொடும்பாவியை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை அக்கட்சியின் பொதுக் குழு தேர்வு செய்தது. முறைப்படி அவர் பொதுச்செயலராக தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கத்தில் காய் நகர்த்தி எம்.எல்.ஏக்களையும் சிறைபிடித்துள்ளது சசிகலா கோஷ்டி. இதையடுத்து சசிகலாவுக்கு அதிமுகவிலே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் உருவ பொம்மையை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேரவை மணியழகன் தலைமையில் தொண்டர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சசிகலா முதல்வராக எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
முன்னதாக சசிகலா முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலாவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். திடீரென சாலைமறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.