தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை கிடையாது... பள்ளியை திறக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு
தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: தீபாவளிக்கு முதல்நாள் அக்டோபர் 28ம் தேதி பள்ளிகள் முழு வேலைநாளாக செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிக்கு விடுமுறை என சில தனியார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை தொடக்க கல்வி துறை நிராகரித்து விட்டது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ம் தேதியன்று சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்கள் தமிழகத்தின் தென் பகுதி மாவட்டங்களில் கடைக்கோடி கிராமங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பள்ளி முடித்து சனிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
தீபாவளிக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
தீபாவளி முதல் நாள் பஸ்களில் அதிகப்படியான கூட்டம் காணப்படும். நெரிசலான நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதால் விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடும் அவதியடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஆசிரியர்கள் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சில மாவட்டங்களில் அறிக்கையாகவும், சில மாவட்டங்களில் வாய் மொழி உத்தரவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும். மாலை 4.10 வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் மேல் நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளும் பள்ளி நாள் காட்டி படி வழக்கமான வேலை நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்வித்துறையின் இந்த அறிவிப்பு ஆசிரியர் சங்கத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. தொடக்க கல்வித்துறையில் அதிகப்படியாக பெண் ஆசிரியைகளே பணியாற்றுகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பணிபுரியும் பெண் ஆசிரியைகள் தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பெண் ஆசிரியைகள், மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று ஆசிரியர் சங்க கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
ஈடுசெய் விடுமுறையோ அல்லது உள்ளூர் விடுமுறையோ அறிவிப்பது என்பது வழக்கத்தில் உள்ள நிலைதான். இதனால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்காது. இந்த விடுமுறை நாளை மற்றொரு வார விடுமுறை நாளில் பணியாற்றி சமன் செய்து கொள்ளலாம். எனவே, தீபாவளிக்கு முதல்நாள் ஈடுசெய் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய தினம் மாணவர்கள் வருகை குறைவாகவே இருக்கும். ஏற்கனவே குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் வராத நிலையும் இருக்கும். ஆசிரியர்கள் பலர் பண்டிகை விடுப்பு எடுத்து சென்று விடுவார்கள். வெளியூர்களில் வசிக்கும் ஆசிரியர்களும் சென்று விடுவர். இது போன்ற பண்டிகை நாட்களுக்கு முந்திய நாள் வேலை நாளாக இருந்தால் அந்தந்த கல்வி அதிகாரிகளிடம் விடுப்பு பெற்று அதற்கு பதிலாக வேறு ஓரு நாளை வேலை நாளாக கருதி ஈடு செய்வர். தற்போதைய அறிவிப்பால் அனுமதி பெற்று விடுப்பு அளிக்க முடியாத நிலை உள்ளது.