தீபாவளி.. தலையில் சூடும் மல்லி விலை கூடியது… சாமிக்கு சாத்தும் சாமந்தி விலை குறைந்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மல்லிப் பூவின் விலை உயர்ந்துள்ளது. சாமிக்கு சாத்தும் சாமந்தியின் விலை குறைந்துள்ளது.
சென்னை: தீபாவளிக்கு நாளை ஒரு நாளே உள்ளது. இதனால் பூக்களின் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்கள் தலையில் சூடிக் கொள்ளும் மல்லியின் விலை கூடியுள்ளது. சாமிக்கு சாத்தும் சாமந்தியின் விலை குறைந்துள்ளது.
நாளை மறுநாள் தீபாவளி. பண்டிகை விசேஷகாலங்களில் பூக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகம். வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காக பூக்களின் தேவை கூடுதலாக இருக்கும்.
இந்நிலையில், பெண்கள் சூடிக் கொள்ளும் மல்லிப் பூவின் விலை கூடுதலாக கிலோ 400 ரூபாயாகவும், சாமிக்கு சாத்தப்படும் சாமந்தியின் விலை கிலோ 60 ரூபாயாகவும் இன்று விற்கப்படுகிறது.மேலும், முல்லை கிலோ 300 ரூபாய்க்கும் கனகாம்பரம் கிலோ 600 ரூபாய்க்கும் மொத்த வியாபாரச் சந்தையில் விற்கப்படுகின்றன.
ஆயுத பூஜைக்கே வந்திருக்க வேண்டிய பூக்கள் மழை இல்லாத காரணத்தால் சற்று தாமதமாக தீபாவளி பண்டிகையின் போது வந்துள்ளது. பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலை சுமார் 60 சதவீதம் கூடுதலாக உள்ளது என்று பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.