தொடரும் கனமழை - ரோட்டுக்கு வந்த புள்ளிமான்கள்!
நெல்லை: நெல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வன விலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வர தொடங்கியுள்ளன. இச்சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் உள்ளனர்.
நெல்லை - மதுரையில் அமைந்துள்ளது கங்கைகொண்டான் மான் பூங்கா. இந்த மான் பூங்காவில் ஆயிரக்கணக்கான மான்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது.
இதனால் கங்கைகொண்டான் மான் பூங்காவில் இருந்து வெளியேறிய பல மான்கள் அந்த வழியாக வந்து நெல்லை பல்கலை கழக வாளகம் முழுவதும் புதரில் வசித்து வந்தன.
இலைதழை உணவுகள்:
அங்குள்ள இலை, தாழைகளை தின்று விட்டு அப்பகுதியில் கிடைக்கும் நீரை அருந்தி விட்டு அங்கேயே தங்கி விட்டன. இப்படி தங்கியிருக்கும் மான்கள் பல நேரங்களில் நெல்லை-தென்காசி சாலைக்கு வருவது வழக்கம்.
கொட்டும் கனமழை:
அப்போது சாலையில் செல்லும் வாகனங்களால் அடிபட்டும், நாய்கள் கடித்தும் பல மான்கள் இறப்பது வாடிக்கையாகி வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
சாலையில் சுற்றும் மான்கள்:
இந்த மழையால் நெல்லை பல்கலைக் கழக வளாகம் முழுவதும் வெள்ளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பல்கலைக் கழகத்தின் பின் பகுதியிலும், அபிஷேகப்பட்டி கால்நடை பண்ணையிலும் வசித்து வந்த புள்ளிமான்கள் தற்போது நெல்லை-தென்காசி சாலையோரம் சுற்றி திரிகின்றன.
கூட்டம் கூட்டமாக “ரோமிங்”:
நெல்லை-தென்காசி சாலையில் கண்ணுக்கு புலப்படும் தூரத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக இரை தேடி வருகின்றன. இந்த வழியாக செல்வோர் மான்களின் கூட்டத்தை ரசித்து வருகின்றனர்.
பயணிகள் மகிழ்ச்சி:
வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் மான்கள் காண கிடைக்கும். இந்த நிலையில் தென்காசி சாலையில் மான்கள் துள்ளி குதித்து விளையாடுவது காண்பேரை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.
சமூக ஆர்வலர்களின் கவலை:
அதே நேரம் இந்த மான்கள் வாகனங்கள் அடிபடாமல் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகி்ன்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.