அரசு வக்கீல் என்ன போஸ்ட் மேனா? ஜெ.வுக்கு இதுவரை சுப்ரீம்கோர்ட் தெரிவித்த கண்டனங்கள்
சென்னை: அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணையின் போதும் முதல்வர் ஜெயலலிதாவையும் தமிழக அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக அரசும் தம் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் மனு. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் விஜயகாந்த் மீது வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து ஜெயலலிதா பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணணயின் போது பதிலளிக்க ஜெயலலிதா தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது தமிழக அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு முன்னர் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைகளின் போது ஜெயலலிதாவுக்கும் தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த கண்டனங்கள்:
- ஜனநாயகத்தில் ஒரு அரசியல் எதிரிக்கு, சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைப் போல நடைபெறும் ஆட்சியை விமர்சனம் செய்வதற்கான உரிமை உண்டு.
- தமிழக அரசு தொடர்ந்த பல வழக்குகளில் அவதூறு தொடர்வதற்கான காரணங்களே இல்லை
- அவதூறு வழக்குகளைப் போடுவதற்காகவே அரசு வழக்கறிஞர்கள் என்ன போஸ்ட் மேன்களா?
- அரசு வழக்கறிஞர்களை போஸ்ட் மேன் போல் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது
- குடிமக்களை காக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை.
- ஒரு அரசை விமர்சிப்பது என்பதாலேயே அது அவதூறாகிவிடுமா?
- அவதூறு வழக்கின் பிரிவுகளை அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமாக பயன்படுத்துவதா?
- ஒரு அரசாங்கம் தகுதியற்றது அல்லது ஊழலில் ஈடுபட்டுள்ளது என ஒருவர் கூறினால் உடனே அது அவதூறு வழக்கு போடுவதற்கான அம்சமாகிவிடாது
- தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஆளுங்கட்சியால் எதிர்கட்சிகள் மீது இத்தனை வழக்குகள் போடப்பட்டதில்லை
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கண்டனம் தெரிவித்திருந்தது.