தினகரனின் கூட்டாளிகளை பிடிக்க சென்னை வருகிறது டெல்லி போலீஸ்
தினகரனின் கூட்டாளிகளை பிடிப்பதற்காக சென்னைக்கு டெல்லி போலீஸார் வரவிருக்கின்றனர்.
டெல்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் மற்றும் அவரது நண்பர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து தினகரனின் கூட்டாளிகளை பிடிப்பதற்காக சென்னைக்கு டெல்லி போலீஸார் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள தினகரன் குறுக்கு வழியில் செல்ல முயன்றார். அப்போது தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், டெல்லி ஹைகோர்ட் நீதிபதி என்றும் சுகேஷ் என்பவர் தினகரனுக்கு அறிமுகமானார்.
அந்த சுகேஷோ இரட்டை இலை சின்னத்தை மாத்திரம் அல்ல, சசிகலாவையும் சிறையிலிருந்து விடுக்க தன்னால் முடியும் என்று ரீல் சுற்றியுள்ளார். இதை நம்பிய தினகரனும் அவரிடம் இரட்டை இலையை மீட்க ரூ.60 கோடி வரை பேரம் பேசியுள்ளார். அதில் ரூ.10 கோடி சுகேஷுக்கும், ரூ.50 கோடி தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் என்று கூறப்படுகிறது.
சுகேஷ் கைது
இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலில் இருந்த சுகேஷை டெல்லி போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து முன்பணமாக தினகரன் வழங்கியதாக கூறப்படும் ரூ.1.30 கோடியையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் சென்னைக்கு வந்து தினகரனிடம் சம்மனை அளித்தனர்.
தினகரன் ஆஜர்
சம்மனில் உள்ளபடி தினகரன் கடந்த 22-ஆம் மதியம் டெல்லி போலீஸார் முன்பு ஆஜரானார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் தினகரன் யாரென்றே தமக்கு தெரியாது என்று தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 3 தினங்கள் போலீஸார் விசாரணை நடத்தியும் தினகரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
சுகேஷுடன் நேருக்கு நேர்
இந்நிலையில் தினகரனை விசாரணை நடத்திய அறையில் சுகேஷை வரவழைத்தனர். அப்போது சுகேஷ் தான் ஒரு ஹைகோர்ட் வழக்கறிஞர் என்று தினகரனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், போலீஸார் கைப்பற்றிய ரூ.1.30 கோடி பணத்தை ஹலாவா கும்பல் மூலம் சாந்தினி சௌக் என்ற பகுதியில் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் நீதிபதி பூனம் சௌதரி முன்பு ஆஜராகினர். அப்போது நீதிபதி, தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நிராகரித்தார். பின்னர் டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தபடி 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
டெல்லி போலீஸார் தமிழகம் வருகை
இந்நிலையில் தினகரனிடமும், அவரது நண்பர்களான ஜனார்த்தனனிடமும், மல்லிகார்ஜுனனிடமும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த லஞ்ச வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்கள் நாளை சென்னைக்கு வந்து விசாரணையை தொடங்குவர் என்று தெரிகிறது.