தினகரன்- சுகேஷ் பேசிய ஆடியோ ஆதாரம் கோர்ட்டில் ஒப்படைப்பு - தொடரும் விசாரணை
டிடிவி தினகரனுடன் சுகேஷ் சந்திரா பேசிய பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஆதாரங்களை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர்.
சென்னை: இரட்டை இலை சின்னம் லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா பேசிய ஆடியோ ஆதாரங்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். டிடிவி தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர் கைது செய்யப்படலாம் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்டகுற்றசாட்டின் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்தும் தினகரனிடம் இருந்து இன்னும் சில முக்கிய தகவல்களை டெல்லி போலீசாரால் பெற இயலவில்லை. எனவே 4வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு தினகரனுக்கு டெல்லி போலீசார் உத்தர விட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக தினகரனிடம் இதுவரை 26 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ரூ.50 கோடி பணம் பேரம் எப்படி நடந்தது? யார்- யாருக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது? ரூ.50 கோடி பணத்தை டெல்லிக்கு கொண்டு வந்தது எப்படி? ஆகிய கேள்விகளை அடிப்படையாக வைத்து தினகரனிடம் கடந்த 3 நாட்களாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினகரனிடம் விசாரணை
இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் ரூ.50 கோடி விவகாரத்தில் டிடிவி தினகரன் உடனான தொடர்புகளை கூறிய நிலையில் டிடிவி தினகரன் மழுப்பலான பதில்களையே கூறியுள்ளார். டெல்லி போலீசார் ஆடியோ ஆதாரங்களையும், ஆவணங்களையும், வாட்ஸ் அப் தகவல் தொடர்பு பதிவுகளையும் காட்டி கிடுக்கிப்பிடி போட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. அதன்பிறகே அவர் சில தகவல்களை போலீசாரிடம் கூறி வருவதாக கூறப்படுகிறது.
ஒத்துக்கொண்ட தினகரன்
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது என்று டி.டி.வி. தினகரன் முதலில் கூறினார். ஆனால் சுகேசிடம் பேசியதற்கான ஆதாரங்களைக் காட்டிய பிறகு ஆமாம் இவரைத் தெரியும். இவரை ஹைகோர்ட் நீதிபதி என்று நினைத்தேன் என தினகரன் ஒத்துக் கொண்டார்.
ஹைகோர்ட் நீதிபதி
இதையடுத்து தினகரனுக்கும், இடைத்தரகர் சுகேசுக்கும் எப்போது, எப்படி தொடர்பு ஏற்பட்டது என்ற விசாரணையை போலீசார் தொடங்கினார்கள். அப்போது ஜெயலலிதா வக்கீல் பி.குமார், இடைத்தரகர் சுகேசை டி.டி.வி.தினரனுக்கு அறிமுகம் செய்து வைத்தது தெரியவந்தது. வக்கீல் பி.குமார் என்ன சொல்லி தரகர் சுகேசை அழைத்து வந்தாரோ தெரியவில்லை. ஆனால் சுகேசை ஹைகோர்ட்டு நீதிபதி என்று நினைத்துக் கொண்டு டி.டி.வி.தினகரன் பேசியதாக கூறப்படுகிறது.
வக்கீல் குமார்
இதையடுத்து ஜெயலலிதா வழக்குகளில் ஆஜரான வக்கீல் குமாரையும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அதன்பேரில் வக்கீல் குமார் நேற்று மாலை போலீஸ் விசாரணைக்கு சென்றார். அவரிடம் போலீசார் நள்ளிரவு வரை சுமார் 11 மணி நேரம் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.
தொடரும் விசாரணை
டி.டி.வி.தினகரன், தரகர் சுகேஷ், வக்கீல் குமார் ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மூவரும் சிலரது பெயர்களை வெளியிட்டனர். அதன்பேரில் இதுவரை சுமார் 15 பேரை டெல்லி போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர்.
கடந்த 8 நாட்களாக நடந்து வரும் விசாரணைகளில் போலீசாருக்கு 50 சதவீத தகவல்களே கிடைத்துள்ளன.
பலர் சிக்க வாய்ப்பு
சுகேஷ் மற்றும் டி.டி.வி. தினகரனிடம் தொடர்பில் உள்ள பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர். இன்னமும் ஹவாலா பணப் பரிமாற்றம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பற்றிய விசாரணை ஆகியவை நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் இணைக் கமிஷனர் தலைமையில் தனிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே விசாரணை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
ஆதாரம் ஒப்படைப்பு
இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ ஆதாரங்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தினகரனிடம் விசாரணை
தினகரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.போலீசார் தரப்பில் தினகரன் மீதான குற்றசாட்டு குறித்து மட்டுமே விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டது. மேலும் சுகேஷிடம் விசாரணை நடத்த 5 நாட்கள்போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. சுகேஷ் சதிராவின் காவல் 28 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
கைதாக வாய்ப்பு
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இடைத்தரகர் சுகேசை தெரியும் என்று டி.டி.வி.தினகரன் கூறினாலும் இரட்டை இலை சின்னம் பெற யாரிடமும் பேரம் பேச வில்லை, யாரிடமும் பணம் கொடுக்கவும் இல்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இன்று நடக்கும் விசாரணைக்கு பிறகு டி.டி.வி. தினகரனை டெல்லி போலீசார் கைது செய்யக்கூடும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக அவரிடம் மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முடித்து விட போலீசார் தீவிரமாகி உள்ளனர். இதன்மூலம் ரூ.50 கோடி லஞ்சம் விவகார விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.