22ம் தேதி தினகரனை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் போலீஸ்
சென்னை: இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை 22ம் தேதி டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 60 கோடி லஞ்சம் தர முயன்றுள்ள வழக்கில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின்பேரில் டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டெல்லி காவல் உதவி ஆணையர் சஞ்சய் மற்றும் காவல் ஆய்வாளர் நரேந்திர சஹால் ஆகியோர் சென்னை வந்து தினகரனை சந்தித்து புதன்கிழமை சம்மன் அளித்தனர்.
அதன் பிறகு சஞ்சய் டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். காவல் ஆய்வாளர் நரேந்திர சஹால் சென்னையில் தான் உள்ளார். அவர் வரும் 22ம் தேதி தினகரனை அழைத்துக் கொண்டு டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் விசாரணைக்கு பிறகு தினகரன் கைது செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.