இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்... தினகரனுக்கு உதவிய மேலும் மூவருக்கு சம்மன்
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் மேலும் 3 பேருக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சென்னை ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் விசாரணை நடத்திய போலீசார் 3 பேருக்கு சம்மன் அளித்துள்ளனர்.
டிடிவி தினகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன், தனியார் செல்போன் நிறுவன மேலாளர் டேனியல், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தினகரனிடம் விசாரணை
பணம் கொடுத்தது தொடர்பாக இரண்டு நாட்களாக தினகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹவாலா ஏஜெண்டை டெல்லியில் கைது செய்தனர்.
மன்னார்குடி தொடர்பு
டிடிவி தினகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த மோகன் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர். மன்னார்குடியை சேர்ந்த மோகன் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியாவர். அவர் வீட்டில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
டெல்லி போலீஸ் விசாரணை
இதே போல கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பிலிப்ஸ் டேனியல் என்பவர் தனியார் செல்போன் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
வக்கீல் கோபி
ஆதம்பாக்கம், கொளப்பாக்கத்தை அடுத்து திருவேற்காடு சென்ற போலீசார் அங்கே வழக்கறிஞர் கோபி என்பவரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் வீட்டில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர்.
3 பேருக்கு சம்மன்
சென்னையில் மட்டும் 3 பேருக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் விசாரணை நடத்திய பின்னர் விஜயவாடா, கொச்சிக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.