சுத்தி சுத்தி செக் வைத்த டெல்லி போலீஸ்: திணறும் தினகரன்
சென்னை: டிடிவி தினகரன் வெளிநாட்டிற்கு தப்பியோடாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் டெல்லி போலீசார் எடுத்துள்ளனர்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 60 கோடி லஞ்சம் தர முயன்றுள்ள வழக்கில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து ரூ. 1.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்பேரில் டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டெல்லி காவல் உதவி ஆணையர் சஞ்சய் மற்றும் காவல் ஆய்வாளர் நரேந்திர சஹால் ஆகியோர் சென்னை வந்து தினகரனிடம் சம்மன் அளித்தனர்.
கட்சியிலும் ஆளாளுக்கு தினகரனை ஒதுக்குவதால் அவர் வெளிநாட்டிற்கு தப்பியோட திட்டமிட்டதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதை தடுக்க அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து விமான நிலையங்களில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் தினகரனின் புகைப்படத்தை அளித்து அவர்களையும் போலீசார் உஷார்படுத்தியுள்ளனர்.
தினகரன் எங்கும் தப்பியோட முடியாதபடி கிடுக்குப்பிடி போட்டுள்ளனர் டெல்லி போலீசார். தினகரனை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல காவல் ஆய்வாளர் நரேந்திர சஹால் சென்னையில் தங்கியுள்ளார்.