காவிரியின் குறுக்கே அணை கட்டுவதா?: கர்நாடகாவை மிரட்டிய டெல்டா விவசாயிகளின் பந்த்
தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே மேகே தாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு, சாலைமறியல், ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்ட விவசாயிகளின் பந்த் போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்றது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் 2 புதிய அணைகளை கட்டி அதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க கர்நாடகம் முடிவெடுத்துள்ளது.இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
இந்த போராட்டத்திற்கு வர்த்தகர் சங்கங்களும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்புப் போராட்டம் நடந்து வரும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.
நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
முற்றிலும் முடங்கியது
தனியார் பேருந்துகள், லாரிகள் ஓடாமல் ஒருசில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் சாலைகள் வெறிச்சோடியது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
சாலைமறியல், கைது
தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மன்னார்குடி சுற்றுவட்டாரத்திலும் மழையை பொருட்படுத்தாமல், பெருகவாழ்ந்தான், மணலி, விளக்குடி உட்பட10 கிராமங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். பரவாக்கோட்டை, கோட்டூரிலும் அரசு, தனியார் வாகனங்களை மறித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் - போலீஸ்
திருவாரூர் அருகே மறியலின்போது போலீசார், விவசாயிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்பு அடைந்தது. மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் சமரசம் செய்ய முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
ரயில் மறியல்
மன்னார்குடியில் விவசாயிகளுடன் இணைந்து அரசியல் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள், காங்கிரஸ், வாசன் ஆதரவாளர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள், வர்த்தக சங்கத்தினர் பங்கேற்றனர்.
கடையடைப்பு போராட்டம்
3 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்களும் தங்களது கடைகளை அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,கும்பகோணம், திருவிடை மருதூர், பாபநாசம், பந்தநல்லூர், சோழபுரம், திருபுவனம்,அணைக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
கர்நாடகாவுக்கு மிரட்டல்
நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியைக் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் 35 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதே போல், விவசாய சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையிலும் வேதாரண்யத்திலும் கடைகள் அடைக்கப்பட்டன. டெல்டா மாவட்ட விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் முழுஅடைப்பு போராட்டம் கர்நாடகாவையே மிரட்டியுள்ளது.