நாடா புயல்.. பரவலாக மழை... விவசாயிகள் மகிழ்ச்சி… வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்
நாடா புயலால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் இல்லாமல் பயிர்கள் வாடி கருகி இருந்த நிலையில் இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நாடா புயல் காரைக்கால் அருகில் கரையை கடந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக நாகை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இதர டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
டெல்டாவில் நல்ல மழை
நேற்றில் இருந்தே டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், பூதலூர், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புயலில் இருந்து தப்பித்த கடலூர்
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கியது போன்று இந்த முறையும் நாடா புயல் தாக்கும் என்று கடலூர் வாசிகள் பயந்திருந்த நிலையில், நாடா புயல் அமைதியாகவே கரையை கடந்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
வெறிச்சோடிய சுற்றுலா மையங்கள்
தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களிலும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் மழை லேசாகவே இருந்தது. ஆனாலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன.
மீண்டும் தொடங்கிய படகு போக்குவரத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த மழை பெய்து வந்ததால், விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர், நிலைமை சற்று சீரடைந்துள்ளதையடுத்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.