பூரண மதுவிலக்கு கோரி சென்னை பல்கலை. மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்- 10 பேர் கைது
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கன்னியாகுமரியில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.
இதன் பின்னர் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நேற்று நடைபெற்ற மதுக்கடையை அகற்றும் போராட்டம் துப்பாக்கிச் சூடு வரை சென்றது.
இந்த நிலையில் சென்னையில் மாணவர்கள் இந்த மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சென்னை பச்சையப்ப்பன் கல்லூரி மாணவர்கள் மதுபானக் கடையை சூறையாடினர். அவர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர்.
இதேபோல் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 10 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டர். இந்த மாணவர்களுடன் பல்கலைக் கழக நிர்வாகம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி 10 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் தங்களது போராட்டம் நாளையும் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.