படுகுழியில் ஜனநாயகம்... உள்ளாட்சித் தேர்தலில் இதற்கு முடிவு கட்டுவோம்: மு.க. ஸ்டாலின்
திருச்சி: தமிழகத்தில் ஜனநாயகம் படுகுழிக்குச் சென்றுள்ளது என்றும், இதற்கெல்லாம் முடிவுகட்ட களம் அமைக்கிற இடம் தான் உள்ளாட்சித் தேர்தல் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியான அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் முக ஸ்டாலின்.
இதனிடையே திருச்சியில், சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் திமுக சார்பில் கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியதாவது: தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை ஜெயலலிதாவுக்கு இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்பது ஆட்சிப்பதவி அல்ல. கேபினட் அந்தஸ்து உள்ள என்னை வெளியேற்றியது மரபை வீசியதற்கு சமம் என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:
கேள்வி கேட்கக் கூடாது
முதல்வர் ஜெயலலிதா தன்னை பார்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது என நினைக்கிறார். இதற்காக, 48 - தேமுதிக, காங்கிரஸ் - 7, பாமக - 9 , ஊடகங்கள் மீது 55 வழக்குகள் போடப்பட்டுள்ளன. நேற்று வரை மொத்தமாக 219 அவதூறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
நாங்கள் செய்த குற்றம் என்ன?
திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து ஒரு வார காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நாங்கள் செய்த குற்றம் என்ன? நீட் பற்றி பேசியதா அல்லது மேகதாது அணை கட்ட கர்நாடகாவை தடுக்க வேண்டும் என ஒத்தி வைப்புத் தீர்மானம் தவறா? எதற்காக 80 பேரை நீக்கியிருகிறார். தமிழக மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் பேசக் கூடாதா?
சதித்திட்டத்தால் வெளியேற்றப்பட்டோம்
விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம், கூட்டுறவு விவசாய கடன் 7000 கோடி ஒரே கையெழுத்தில் ரத்து செய்தவர் கலைஞர் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டசபையில் பேசுவது தவறா?. சட்டம் ஒழுங்கு பற்றி பேச காவல்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிற நேரத்தில் ஆதாரத்தோடு திமுகவினர் பேசினால் ஜெயலலிதாவுக்கு கோபம் வந்துவிடும் என சதித்திட்டம் உருவாக்கி நிறைவேற்றுகிற வகையில் நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.
பத்திரிக்கைகளின் செய்தி
எதிர்க்கட்சி எவ்வளவு குறைவான உறுப்பினர் இருந்தாலும் அவர்களுக்கு பேச வாய்ப்பளிப்பது தான் மரபு எனவும், முக்கியப் பிரச்சினைகளை பேசவும் வாய்ப்பளிப்பது தான் என நேற்று இந்து ஆங்கிலப் பத்திரிக்கை தலையங்கத்தில் எங்களின் நீக்கத்தை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். இதேபோல, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ஒடுக்குவது சபாநாயகரின் அதிகாரம் அல்ல என்றும், ஜனநாயகத்தை காப்பது தான் கடமை என்று ஆனந்த விகடனில் இது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கேபினட் அந்தஸ்து
ஜெயலலிதாவை புகழ்வது அவர்களின் கடமையாக இருக்கலாம். ஆனால் சட்டசபையில் இருந்து குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றுவது மரபு அல்ல. அதே நேரத்தில் திமுக தலைவர் குறித்து விமர்சிப்பதை ஏற்க முடியாது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என்பது ஆட்சிப்பதவி அல்ல. கேபினட் அந்தஸ்து உள்ள என்னை வெளியேற்றியது மரபை வீசியதற்கு சமம்.
அவைக்கதவு பூட்டப்பட்டது
2011-ல் இருந்து 2016 வரை ஏதாவது ஒரு வாரம் உங்களுடன் அவர் பேசி இருக்கிறாரா?. எங்களை சட்டசபையில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல், சட்டசபைக்கே வரக்கூடாது என அவைக்கதவு பூட்டப்பட்டது.
மாதிரி சட்டசபை
இதற்கு அடுத்த நாள் மாதிரி சட்டசபையை நடத்தினோம். ஜனநாயக முறையோடு தான் மாதிரி சட்டசபையை நடத்தினோம். இது ஜெயலலிதாவுக்கு பொறுக்கவில்லை. இதையடுத்து, உடனே எங்கள் மீது வழக்கு பாய்ந்தது.
பேச்சுவார்த்தை இல்லை
மேகதாது, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகிய பிரச்சினைகள் பற்றி பேச கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறோம் முடியவில்லை. அண்டை மாநில முதல்வர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முயற்சி எடுக்கமாமல், இது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டமும் கூட்டப் படவில்லை மாறாக கடிதம் எழுதவதோடு நின்றுவிடுகிறார் ஜெயலலிதா.
சுயமரியாதையை இழக்க மாட்டோம்
சட்டசபை ஜால்ரா சபையாக இருக்கிறது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் எதிரிக்கட்சியாக அல்ல என்று உறுதி மொழி கூறினோமே. இதனிடையே, திமுக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிமுக அமைச்சர்களால் பதில் சொல்ல முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டால் அவமானம் எனக்கருதி எங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு கோபப்படுத்தி வெளியேற்றியிருக்கிறார்கள். இவற்றைக் கேட்டுக் கொண்டு சுயமரியாதையை இழந்து நிற்க மாட்டோம்.
சர்வாதிகார ஆட்சி
சட்டசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என காரணம் கூறி தான் செல்கிறோம். அதிமுகவின் பொதுக்குழுவில் கால் மணி நேரம் நமக்கு நாமே பற்றி பேசி இருக்கிறார். தற்போது நடப்பது சர்வாதிகார ஆட்சி. எதிர்க்கட்சியே இல்லாமல் காவல் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு கோமா நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.
சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி இல்லை
ரயில் கொள்ளை பற்றி விரிவான விசாரணை இல்லை. மேலும், சைதாப்பேட்டையில் நீதிபதி வீட்டில் கொள்ளை நடைபெற்றது. ஆனால் தமிழகம் அமைதிப் பூங்கா என கூறுகிறார் ஜெயலலிதா. குறிப்பாக தேர்தல் நேரத்தில் 570 கோடி பிடிபட்டது பற்றி சட்டசபையில் பேச அனுமதி இல்லை. விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டோம் ஏற்கவில்லை. ராமஜெயம் கொலையில் முறையான விசாரணை நடைபெறவில்லை. இது போன்ற விவகாரங்களை சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.
முடிவுகட்டுவோம்
இதன் மூலம் ஜனநாயகம் படுகுழிக்குச் சென்றுள்ளது. இதற்கெல்லாம் முடிவுகட்ட களம் அமைக்கிற இடம் தான் உள்ளாட்சித் தேர்தல். அதற்குத் தயாராவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.