இன்று நள்ளிரவு முதல் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் பேருந்து, ரயில்களில் செல்லாது !
பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று நள்ளிரவுக்குப் பிறகு ரயில், பேருந்துகளில் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை : டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டை சில சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் சலுகை அளித்திருந்தது. அதன்படி மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில் ரூ. 2000 வரை கல்விக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்து கொள்ள பயன்படுத்தலாம். நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் உரிய அடையாள அட்டைகளைக் காட்டி ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது இந்த பழைய நோட்டுக்களைப் பயன்படுத்தலாம். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க பயன்படுத்தலாம்.
குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம். அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தலாம். மருத்தவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க பயன்படுத்தலாம் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்கப் பயன்படுத்தலாம்.
மயானங்கள் இடுகாடுகளில் பயன்படுத்தலாம். காஸ் சிலிண்டர்களை வாங்கப் பயன்படுத்தலாம். ரயில்களில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தலாம். புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள்,வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட பயன்படுத்தலாம்.
கோர்ட் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம். அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பாகும்.
ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து ஒருமாதகாலமாகியும் சில்லறை ரூபாய் நோட்டு தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பழைய நோட்டுக்களை செல்லத்தக்கதாக மாற்றுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது மத்திய அரசு.
கடந்த டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்குகள், விமான நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. இந்த நிலையில் திடீரென புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.