சென்னையில் கைப்பற்றப்பட்ட ரூ.45 கோடி பணம் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க முடிவு
சென்னையில் பாஜக பிரமுகரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடையில் பதுக்கப்பட்டிருந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை சக்காரியா காலனி 2-வது தெருவில் துணிக்கடையும் வீடுமாக இருந்த இடத்தில் அட்டைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சிக்கியுள்ளது. இந்தப் பணத்துக்குச் சொந்தக்காரரான தண்டபாணி பாஜக பிரமுகராவார். வழக்கறிஞரான இவர் பள்ளிச்சீருடை மற்றும் போலீஸ், ராணுவ சீருடைகள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
கட்டுக்கட்டாக பணம்
இவரது கடையில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து துணை ஆணையர் தலைமையிலான போலீஸ் குழு தண்டபாணியின் கடைக்கு சென்ற சோதனை மேற்கொண்டனர். அங்கே கட்டு கட்டாக பெட்டிகளுக்குள் ரூ.45 கோடி ரூபாய் இருப்பதை கண்டு பிடித்தனர்.
பாஜக பிரமுகர்
இதனையடுத்து தண்டபாணி கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பணத்தைப் பாதுகாப்பாக வைக்கக்கோரி இன்னொருவர் தன்னிடம் இந்தத் தொகையை அளித்ததாக தண்டபாணி தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை
பணம் கைப்பற்றப்பட்ட செய்தி வருமான வரித்துறையினருக்கும் அமலாக்கப் பிரிவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணத்தை தண்டபாணியிடம் கொடுத்து வைத்த முக்கிய பிரமுகர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க முடிவு
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கமிஷன் அடிப்படையில் சிலர் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இப்போது அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தண்டபாணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.