டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வுக்காக.... 48 மணி நேரம் மாணவர்கள் தொடர் “ஸ்கேட்டிங்”
தூத்துக்குடி: தூத்துக்குடி டூ சென்னை டூ தூத்துக்குடி வரை 1226 கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவ, மாணவியர்களின் 48மணிநேர தொடர் ஸ்கேட்டிங் பயணம் தூத்துக்குடியில் துவங்குகிறது.
தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்குகாய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், புதிய உலக சாதனை படைத்திடவும் இடைவெளி ஏதுமின்றி 48 மணிநேர தொடர் ஸ்கேட்டிங் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி தூத்துக்குடி டூ சென்னை டூ தூத்துக்குடி வரையிலான 1226 கிலோமீட்டர் தூரத்தை 32 மாணவ, மாணவியர்கள் 48மணிநேரத்தில் எங்கும் நிற்காமல் கடந்து புதிய உலக சாதனை படைக்க உள்ளனர்.
உலக சாதனைக்கான மாணவ, மாணவியர்களின் இந்த ஸ்கேட்டிங் பயணம் நாளை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக நுழைவுவாயில் முன்பிருந்து துவங்குகிறது.
மாணவ, மாணவியர்களின் தொடர் ஸ்கேட்டிங் பயணத்தை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியன், தூத்துக்குடி சுங்கத்துறை இணை ஆணையர் உமாசங்கர்கவுடு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். .
இங்கிருந்து தொடங்கும் தொடர் ஸ்கேட்டிங் பயணம் அருப்புக்கோட்டை, மதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவளம் வழியாக சென்னை எம்.ஜி.எம். டிஸ்சி வேர்ல்டை 27ம் தேதி மாலை 4மணிக்கு சென்று அடைகிறது. அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவ, மாணவியர்களை வரவேற்று வழியனுப்பி வைக்கிறார்.
தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் சாதனைப்பயணம் மீண்டும் அதே வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு 28ம் தேதி மாலை 5மணிக்கு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வந்து சேருகிறது.
அங்கு, சாதனை மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழா நடக்கிறது. விழாவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியன் ஆகியோர் சாதனை மாணவ, மாணவியர்களை பரிசு வழங்குகின்றனர்.
மாணவ, மாணவியர்களின் 48மணிநேர தொடர் ஸ்கேட்டிங் பயணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷனின் செய்தி&மக்கள் தொடர்பு அலுவலர் மோசஸ் செல்வகுமார், பொறுப்பாளர் அம்ஜத்கான், பொருளாளர் கௌதம், நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளையினர் மற்றும் இரத்ததான இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.